சைவம் (2014) - விமர்சனம்

தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.

"சைவம்" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், "பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, "கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா? அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை

படத்துல எனக்கு பிடித்த சில ....

குழந்தை நட்சத்திரம் சாரா
படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என "லவ் யூ சாரா!'

நாசர்
சாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.


சாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

சண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.

இயக்குநர் விஜய்
அருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் "அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top